இது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாத இதழ்



வியாழன், ஆகஸ்ட் 19, 2010

உங்கள் பொறுப்புள்ள பிள்ளை (கடிதம்)

அன்புள்ள அம்மாவுக்கு...

நீங்கள் பெற்றதுக்காக என் சிந்தனையும் உழைப்பும் உங்களுக்கு அடிமை கிடையாது. இது எனக்கு மட்டுமல்ல, மனிதனாக பிறந்த எல்லோருக்கும் பொருந்தும்.

என்னை நம் குடும்பத்தின் ஒருத்தன் என்று மட்டும் நீங்கள் கருதுகிறீர்கள். இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?  ‘மனித குல சமூகத்தில் நான் தனிமனிதன் மட்டுமில்லை. குடும்பத்திலும் ஒருத்தனாக இருக்கிறேன்.’

எனக்கும் பொறுப்புகள் இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். குடும்பத்தில் மட்டுமல்ல, அதைவிட மனிதகுல சமூகத்தில்!




கண்ணைச் சுண்டிக்கொண்டு பைத்தியத்தைப் பார்ப்பதைப்போல பார்க்கிறீர்களா? உங்கள் பார்வை எனக்கு பழகிவிட்டது.

உங்களையும், நம் குடும்பத்தையும் தவிர்த்த ஏதோ தனியான ஒன்றல்ல மனிதகுல சமூகம். இதை உங்களுக்கு குறிப்பிட்டுச் சொல்கிறேன். உங்களைப்போன்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் என்னைப் போன்ற பொறுப்புள்ள பிள்ளைகள் இதை உணர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

உங்களையும் உங்களைப் போன்றவர்களையும் அரசு திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. பல்லைக் கடித்துக்கொண்டு, ‘‘லூசுத்தனமா பேசாதே, ஊரே உன்னைப் பார்த்து சிரிக்குது’’ என்று கத்துகிறீர்களா? கத்துவதை நீங்கள் உரிமையாக நினைக்கலாம். உரிமை மட்டுமல்ல வளர்ந்த குணமாகவும் இருக்கிறது, உங்களைப் போன்றவர்களுக்கு. நீங்கள் கத்துவதில் நான் தலையிட முடியாது தற்சமயம்.

மனிதகுலத்தின் ஆரம்ப சமூகம், அரசு என்பதே இல்லாத பொதுவுடைமை சமூகமாக இருந்தது. மீண்டும் ஓர் அரசு இல்லாத சமூகமாக இனிப்பதற்கு, சமூக பிரச்சனைகளை உரமாக்கிக் கொண்டு, வேகமாக வேர்விட்டு ஆரோக்கியமாக வளர்கிறது, இன்றைய சமூகமாற்றம். உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் விளங்கினாலும் விளங்காவிட்டாலும் இதுதான் விஞ்ஞான உண்மை. இருந்தாலும் உங்கள் புரிதலின் இன்றையத் தேவைக்காக இதைச் சொல்கிறேன்.

அரசு,அரசியல் என்பதெல்லாம் நீங்கள் நினைப்பது போல ஏதோ சில பெரியமனிதர்கள் அல்ல.

நானும் நீங்களும் நம்மைப்பற்றி யோசிக்கிறோமோ இல்லையோ, நம் அரசு யோசிக்கிறது. அரசின் நோக்கம் சரியோ தவறோ, அதன் செயல்பாடுகளில் நமது அக்கரை இருக்கிறதோ இல்லையோ, அது நம்மைப்பற்றி திட்டமிட்டுச் செயல்படுகிறது. எல்லா வகையிலும் நம் மீது அதிகாரம் செய்கிறது.

நமக்கு  தெரிந்தோ, தெரியாமலோ,விரும்பியோ,விரும்பாமலோ அரசுடன் பிண்ணிப் பிணையப்பட்டிருக்கிறோம். அதனால்தான் என்னைப் போன்றவர்கள் அரசின் மீது தங்கள் கடமையைக் காட்டுகிறார்கள்.
வீன்முயற்சி என்ற விரக்தி, எதையும் மாற்ற முடியாது என்ற மடமை, பைத்தியக்காரத்தனம் என்ற பம்மாத்து, பயங்கரவாதம் என்ற பபூச்சாண்டி,

‘இப்படித்தான் இருக்கனும்’ என்று அதிகாரம் செய்யும் திமிர், இப்படியெல்லாம் உங்களைப் போன்றவர்கள் தட்டிப்பார்க்கிறார்கள்,எங்களை. உதறித்தள்ளுகிறோம் நாங்கள்,மனிதகுல சமூகத்திற்காக... மனிதகுல வரலாற்றில் பொறுப்புள்ள மனிதர்களின் வேலை இப்படித்தான் இருந்திருக்கிறது.

நானும் நீங்களும் அடிக்கடி மல்லுக்கட்டுவதை நினைத்துப் பாருங்கள். ‘‘எந்தக் கருத்தை சொல்வதற்கும், எந்தத் தகவலைப் பெறுவதற்கும், எந்தக் கருத்தை வைத்துக் கொள்வதற்கும் எனக்கு உரிமை  இருக்கிறது  கருத்தை மட்டும் சொல்லுங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள் - நான் எதை செய்ய வேண்டும் என்பதை நான்தான் முடிவெடுக்க வேண்டும் - முடிவெடுக்கும் உரிமை எனக்கும் இருக்கிறது- எதைப் பறர்றி கருத்து சொல்லவும் எனக்கு உரிமை இருக்கிறது...’’ இப்படியெல்லாம் நான் சொல்லியிருக்கிறேன். அவ்வளவுதான், உடனே உங்கள் அத்தனை அணுக்களும் கோபத்தை அள்ளி அள்ளி எறிந்திருக்கிறது என்மேல்.

‘குடும்பம் ஒரு குட்டி அரசு’ சமூக விஞ்ஞானியும் மாவீரருமான லெனின் அவர்களுடைய கவிதை போன்ற இவ்வரிகளை அடிக்கடி உணர்த்தியிருக்கிறது உங்கள் கோபம்.

உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். உரிமை, சுதந்திரம் என்பதெல்லாம் நானாக சொல்வதல்ல. நம் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. மனிதகுல சமூகத்தில் ஒவ்வொரு மனிதரும் வாழ்வதற்கான சுதந்திரத்தின் அளவு, அவருக்கு இருக்கின்ற உரிமைகள் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் விரிவாகவே இருக்கிறது. உங்களுக்குத் தேவையென்றால் ஐக்கியநாட்டுச் சபையையும் விசாரித்துப் பாருங்கள். மக்களின் வாழ்க்கை உரிமைகள் பொம்மையாக்கப்படுகின்றபோது நாங்கள் உண்மைக்காகப் போராடுகிறோம். என் புத்தகங்களை நீங்கள் அருவருப்பாகப் பார்க்கிரீர்கள். உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன்.

நாம் எப்படிப்பட்ட உலகத்தில் வாழ்கிறோம்? மனிதகுல சமூகம் இப்படி இருப்பது சரியா? எப்படி இருக்க வேண்டும்? இதற்கான விடைகளைப் பெறுவதற்கு புத்தகங்களைப் படிப்பதும் மிகச் சிறந்த வழி. இவை முக்கியமான வழிகாட்டிகளாக பிரகாசிக்கின்றன. மனிதகுல சமூகத்தில் எனக்கான பொறுப்புகளை தீர்மானிப்பதற்கு புத்தகங்களும் உதவுகின்றன.

கலந்து பேசுவதையும், விவாதிப்பதையும்கூட நீங்கள் இப்படிப் புரிந்துகொள்வதே சரியாக இருக்கும். ‘‘இப்படி இருன்னு என்னைய அதிகாரம் பண்ணாத. நான் உன்னைய அனுசரிக்க முடியாது. நீதான் எங்கள அனுசரிச்சு நடக்கனும். குடும்பத்துக்கு அடங்கிதான் நடக்கனும்...’’ நீங்கள் இப்படி பேசுவதால் சொல்கிறேன். நான் கருத்து சொல்வதுகூட உங்களுக்கு அதிகாரமாகப் பட்டிருக்கலாம். யாரும் யாரையும் கட்டுப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ தேவையில்லை. ஓவ்வொரு மனிதரும் சக மனிதருடைய சமூக உரிமையை அங்கீகரிப்பதும் மதிப்பதுமே அவசியத்தேவை.

குடும்பத்தில் மட்டுமல்ல சமூகத்தின் எல்லாப் புள்ளியிலும் இது பொருந்தும்.

நீங்கள் நினைத்துப்பாருங்கள், ‘கொசு சனியன் இப்படியா ஆய்வது’ என்று என்னிடம் புலம்புவீர்கள். ஒரு நாளுக்கு கோடிக்கணக்கான கொசுவை உற்பத்தியாகவிடுகிறது அரசு என்பேன். ஏதோ கேணையன் க்கே... க்கே... என்று அர்த்தமின்றி கத்துவதைப்போல என்னை பார்ப்பீர்கள். என்னுடைய கருத்துரிமையை அவமதிக்கும் நோக்கமாகவே உங்கள் பார்வை வெளிப்படும். உங்கள் பிள்ளை இப்படிச் சொன்னது எப்படிச் சரியாகும் என்ற கேள்வியோ, ஆர்வமோ சிறிதும் எட்டிப்பார்க்காது. இது உங்களுடைய குற்றமல்ல ---------------------என்பiதையும் நான் தெரிந்திருக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

குடும்ப உணர்வு மட்டும் உள்ளவனாக இருக்கச் சொல்கிறீர்கள். இது மனிதகுல சமூகத்தின் விஞ்ஞான உணர்விற்கு சிறிதும் பொருந்தாது. இயற்கை, மனிதன், சமூகம் அனைத்திற்கும் எதிரான சிந்தனையென்று உறுதியாகச் சொல்லுவேன்.

மனிதகுல சமூகத்தில் நமது பொறுப்பை சிறிதும் உணராமல் இருக்கிறீர்கள் என்பதையே இது உணர்த்துகிறது.

உங்களைக் குற்றவாளியாக்குவது எனது நோக்கமல்ல. நானும், என்னைப் போன்றவர்களும் உஙர்களை குற்றவாளியாக கருதமுடியாது.
எப்படி...? ‘‘குடும்ப உணர்வு மட்டும் உள்ளவனாக...’’ அதாவது, ஓடில்லாத கொலகொலத்த முட்டையைப்போல அருவருப்பான வாழ்க்கை!  நாங்களும் இப்படித்தான் வாழ வேண்டுமா? எங்களால் அருவருப்பானவர்களாக வாழ முடியாது.

ஒரு காரியம் நம்மால் முடியவில்லையென்றதும் கோபம், அழுகை, நையாண்டி போன்ற பலவிதமான வடிவங்களில் வெளிப்படுகின்றது, நம் இயலாமை. உங்கள் விஷயத்தில் என்னிடமே இதை உணர்ந்திருக்கிறேன்.

நம் குடும்ப பிரச்சனைகளையும் நான் விஞ்ஞான உணர்வோடு விளக்கும்போது என்னால் உணர முடிந்தது இதைத்தான். எங்கள் விஞ்ஞான உணர்வை எரிதர்துவிட்டு உங்கள் தவறான புரிதலையே ஏற்றுக்கொள்ளச்சொல்லி கட்டாயப்படுத்துகிறீர்கள், என்னை.

குடும்ப பிரச்சனைகளை விஞ்ஞான உணர்வோடு புரிந்துகொள்ளும் ஆற்றல் உங்களர்க்கில்லை என்பதல்ல பிரச்சனை. நான் விஞ்ஞான உணர்வோடு மனிதகுல சமூகத்தின் பிரச்சனைகளை மாற்றுகின்ற கடமையை ஆர்வத்துடன் செய்கிறேன். இதுதான் உங்கள் பிரச்சனை.

உங்கள் மூளை என்னை சமூகத்தின் சக மனிதனாக பார்க்கவில்லை. குடும்பத்தின் வெறும் சொத்தாகவே பார்க்கிறது. நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ‘அடுப்பில் பிறந்த உணவை அடுப்பே திண்பதில்லை. அடுப்பால் பெற்ற அமுதை அடுப்புக்கே ஊற்றினால், அது மடமை’.

என்னைப் போன்றவர்களின் தேவை நம் மனிதகுல சமூகத்திற்கு அதிகம் இருக்கிறது. பிறகு சுயநலத்தோடு இருந்துவிட எங்களால் எப்படி முடியும்?

மனிதகுல சமூகம் தேவையறிந்து எங்களை ஈர்த்துக்கொண்டு இருக்கிறது என்ற உறதியுடனும், விஞ்ஞான உணர்வுடனும்...

உங்கள் பொறுப்புள்ள பிள்ளை
புதியவன் 

இந்த மாத இதழ் முகப்பு

இந்த மாத இதழ் முகப்பு
ஜூலை 2014